முகப்பு

lundi 18 janvier 2016

நட்பின் மூலம் உலகை ஒன்றாக்குவோம்.



குடும்ப உறவுகளில் உயர்வு, தாழ்வு உண்டு. பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடு உண்டு. ஆனால் உண்மையான நட்பில், நட்பு மட்டுமே உண்டு.

ஒருவன் நல்ல இடத்தில் வந்து விட்டால், அவனை நண்பன் என்று சொல்லிக் கொண்டு வரும் பெரிய கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. நல்ல நண்பர்களையும், நண்பன் என்ற பெயரில் ஏமாற்ற நினைப்பவர்களையும் நாம் அடையாளம் கண்டு வாழ்வது மிகவும் அவசியம்.

ஒரு குளத்தில் நிறைய மீன்கள் இருந்தன. அந்தக் குளத்தின் நீரைப் பயிருக்குப் பயன்படுத்தியதால் நாளுக்கு நாள் நீரின் அளவு குறைந்து கொண்டிருந்தது.

ஒரு கொக்கு அந்தக் குளத்தின் கரையில் சோகமாக நின்று கொண்டிருக்க, மீன்கள் அதன் கவலையின் காரணம் கேட்டன.

'இந்தக் குளத்தில் நீர் எல்லாம் வற்றிப் போனால் நீங்கள் செத்துப் போவீர்களே?'என்றது கொக்கு.

'நாங்கள் பிறந்தது முதல் இந்தக் குளத்தைத் தவிர வேறொன்றும் தெரியாது. நீங்கள் தான் பல இடங்களுக்குப் பறந்து சென்று வந்துள்ளீர்கள். நீங்கள் தான் எங்களுக்கு நல்ல வழி சொல்ல வேண்டும்' என்றன மீன்கள்.

'நண்பர்களே, இங்கிருந்து கொஞ்ச தூரத்தில் ஒரு குளம் உள்ளது. அங்கே நீர் எப்பொழுதும் வற்றாது' என்றது கொக்கு.

இதைக் கேட்ட மீன்களின் முகத்தில் மகிழ்ச்சி. ஆனால் எப்படி அங்கே போவது என்ற கவலை.

'நான் ஒவ்வொருவராக வாயில் ஏந்தி, பறந்து சென்று, அந்தக் குளத்தில் விட்டு விடுகிறேன். நீங்கள் அங்கே பிழைத்துக் கொள்ளுங்கள்' என்றது கொக்கு.

நன்றியுள்ள மீன்களும் உடனே சம்மதித்தன. ஒவ்வொரு நாளும் கொக்கு மீனை வேறு குளத்துக்கு எடுத்துச் செல்வதாகச் சொல்லி, அருகில் உள்ள பாறையில் வைத்துக் கொன்று தின்றது.

ஒரு நாள் ஒரு நண்டு தன்னையும் அந்தக் குளத்தில் கொண்டு போய் விடுமாறு கேட்டது. கொக்கும் தன் கழுத்தில் மெதுவாகக் கடித்து தொங்கிக் கொண்டு வருமாறு சொல்ல, நண்டும் அவ்வாறே செய்ய, கொக்கு நண்டைத் தூக்கிச் சென்றது.

கொஞ்ச தூரம் பறந்து பாறை அருகே கொக்கு இறங்கி வரும் போது, கொக்கால் ஏமாற்றப்பட்டு கொக்குக்கு உணவான மீன்களின் மீதி எலும்புகள் இன்னொரு பாறை போலக் குவிந்து கிடப்பதை நண்டு பார்த்தது. கொக்கின் வஞ்சம் புரிந்து விட்டது நண்டுக்கு.

தன் கூரான பற்களால் கொக்கின் கழுத்தை நண்டு நறுக்க, கொக்கு பதறியது, துள்ளியது. பின் ரத்தம் கொட்டி இறந்தது.

நடந்து கொண்டே மீண்டும் குளத்துக்கு வந்த நண்டை மீன்கள் ஆச்சரியத்துடன் பார்த்தன. நண்டும் நடந்ததைக் கூற, நண்பன் எனச் சொல்லி ஏமாற்றிய தீய கொக்கைக் கொன்று தம்மைக் காத்த நல்ல நண்பன் நண்டுக்கு நன்றி சொன்னன.

கூடா நட்பினால் கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகி, படிப்பையும், வாழ்க்கை இழந்ததையும் காணலாம். எனவே, கவனமாகவும் இருக்க வேண்டும்.

பேனா நண்பர்கள் என முன்பு வெவ்வேறு நகரங்களிலும் நாடுகளிலும் இருந்தார்கள். முன்பின் தெரியாதவர்களுக்கு எழுதுவதிலும் அவர் களைப்பற்றித் தெரிந்து கொள்வதிலும் சிறுவர் முதல் பெரியவர் வரை பலர் ஆர்வம் காட்டினார்கள்.

இன்று இணைய தளத்தில், சமூக வலைத் தளங்களில், முகநூல் போன்ற தளங்கள் உள்ளன. எல்லா நாடுகளிலிருந்தும் நண்பர்கள் சேர உதவியாக இருக்கின்றன.

முகநூலைப் போன்ற இணைய தளங்களில் பல குழுக்கள் உள்ளன. உதாரணத்துக்கு 'உணவுப் பிரியர்கள்' என்ற குழுவில் புலம் பெயர்ந்து பல நாடுகளுக்குச் சென்றவர்கள் தம் நாட்டின் உணவுப் பழக்கங்களையும், அன்றைய உணவைப் பற்றிய செய்திகளையும் பகிர்ந்து கொள்வது நன்றாக உள்ளது.

ஆனால் நண்பர்களைப் போலவே, இணையதளத்திலும் நல்லது எது கெட்டது எது என்று தெரிந்த பெரியவர்களிடம் அறிந்து கொள்ளவேண்டும்.

நண்பர்களைப் பெறுவது எப்படி? நீ ஒரு நல்ல நண்பனாக இரு, நிறைய நண்பர்கள் தானாகக் கிடைப்பார்கள். உன்னைப் பற்றி பேசுவதை விட மற்றவர்கள் பேசுவதைக் கேள். அது நட்புக்கு நல்ல உரமாகும்.

கண்ணீரைத் துடைப்பது உறவு என்றால், கண்ணீரைத் தடுப்பது நட்பு ஆகும்.

நட்பின் மூலம் உலகை ஒன்றாக்குவோம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire