முகப்பு

vendredi 24 juin 2011

மண வாழ்க்கை மிக சிறந்ததாக அமைய




இல்லற பந்தத்தில் கணவன் மனைவிக்கு இடையேயான உறவு என்பது மிகவும் புனிதமானது.
வெவ்வெறு தளங்களில் இருந்து வந்திருக்கும் இருவர் இணைந்து வசிக்கும் போது அவர்களுக்கிடையேயான பரஸ்பரம் புரிதலும் அன்புமே வாழ்க்கை பயணத்தில் இனிமையை கூட்டும்.
அபரிமிதமான அன்பும், எதிர்பார்ப்பில்லாத நேசமுமே உறவுச்சங்கிலியின் நெருக்கத்தை அதிகரிக்கும். பிறந்து வளர்ந்த இடங்களையும் உறவுகளையும் விட்டு விட்டு கணவனின் வீடே உலகம் என்று வரும் பெண்ணிற்கு சரியான பாதுகாப்பினை வழங்க வேண்டியது கணவனின் கடமை.
உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் கணவனுக்காக எதை வேண்டுமானலும் செய்ய மனைவி தயாராகி விடுகிறாள். மனைவியின் நன்மதிப்பு புத்தகத்தில் இடம் பெற கணவன் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:
அதிக நேரம் செலவிடுங்கள்: மனைவி என்பவர் உங்களை மட்டுமே நம்பி வந்தவர். அவருக்காக அதிக நேரம் செலவிடுவது ஒன்றும் தவறில்லை. உறவுகளும் மிகவும் முக்கியம் தான். ஆனால் வாழ்க்கையின் அனைத்து சுக துங்கங்களையும் சரிபாதியாக பகிர்ந்து கொள்ளும் மனைவிக்கு கூடுதல் நேரத்தை ஒதுக்குவதில் தவறொன்றும் இல்லை.
பொழுது போக்கில் ஆர்வம்: அதிகாலை எழுவது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை கணவருக்காகவும், அவரது குடும்பத்திற்காகவும் நேரத்தை செலவிடுகின்றனர் பெண்கள். அவர்களுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கும் என்பதை புரிந்து கொண்டு அக்கறை காட்டுங்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்.
பொறுப்பான தந்தையாக நடந்து கொள்ளுங்கள்: கணவனுக்கு அடுத்தபடியாக பெண்கள் அதீத அக்கறை செலுத்துவது குழந்தைகள் மீது தான். குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் பெண்களுக்கு எந்த அளவிற்கு உரிமையும் கடமையும் இருக்கிறதோ அதே அளவு ஆண்களுக்கும் உண்டு. குழந்தைகளுக்கு பொறுப்பான தகப்பனாக நடந்து கொள்ளும் ஆண்களை கொண்டாடும் பெண்கள் அதிகம் உள்ளனர்.
மனைவியின் நட்புக்கு மதிப்பு ஆண்களுக்கு என்று நட்பு வட்டம் இருப்பதைப் போல பெண்களுக்கு உயிர்தோழிகள் உண்டு. திருமணத்திற்குப் பிறகு அதை தொடர முடியவில்லையே என்ற ஏக்கம் அநேகம் பேருக்கு ஏற்படுவதுண்டு. மனைவியை அழைத்துக்கொண்டு அவரது தோழிகளின் வீட்டுக்குச் சென்று நட்பை புதுப்பிப்பதில் தவறொன்றும் இல்லை.
பரிசுப் பொருட்களால் அசத்துங்கள்: ஒவ்வொரு பெண்ணிற்கும் விலை மதிப்பில்லாத பரிசுப்பொருள் கணவன் மட்டுமே. இருந்தாலும் கணவர் ஒரு முழம் வாங்கிக் கொடுத்தாலே அதை நான்கு பேரிடம் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வார்கள்.
பிறந்தநாள், திருமணநாள் என வாழ்வின் முக்கிய தருணங்களை நினைவில் வைத்துக் கொண்டு அந்த நாளில் மனைவிக்கு பரிசுகளை வாங்கித் தந்து அசத்துங்கள். எந்த சந்தர்ப்பத்திலும் திருமண நாளை மறந்துவிடாதீர்கள்.
விடுமுறையை அனுபவியுங்கள்: ஆண்டு முழுவதும் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் மனைவியை ஆண்டுக்கு ஒருமுறையாவது வெளியூருக்கு அழைத்துச் சென்று வாருங்கள். அது அவர்களுக்கு பரவசமான தருணமாக இருக்கும். இவற்றை சரியாக கடைபிடித்தாலே உறவுபந்தத்தின் நெருக்கம் அதிகரிக்கும். எந்த சந்தர்ப்பத்திலும் யாருக்காகவும் மனைவி உங்களை விட்டுக்கொடுக்க மாட்டார். 



தமிழிலும் இனி மொழிமாற்றம் செய்யலாம்: கூகுளின் சாதனை


தமிழிலும் இனி மொழிமாற்றம் செய்யலாம்: கூகுளின் சாதனை

தமிழிலும் இனி மொழிமாற்றம் செய்யலாம்: கூகுளின் சாதனை

கூகிள் Translate பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு கட்டுரைகளை மாற்ற உதவுகிறது.
இதுவரை தமிழ் மொழிக்கு மாற்றும் வசதி இல்லை. தற்போது அதனையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் தற்போது சோதனை முறையாகவே அறிமுகம் செய்துள்ளது.
அதனால் சரியாக மொழிமாற்றம் செய்யவில்லை. பல ஆங்கில வார்த்தைகளை ஆங்கில வார்த்தைகளாகவே கொடுக்கிறது. அதே போல தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மாற்றினால் பல தமிழ் வார்த்தைகளை தமிழிஷ்[Tamil word in English] வார்த்தைகளாகவே கொடுக்கிறது.
மொழிமாற்றம் செய்ய:
http://translate.google.com/  தளத்திற்கு சென்று நீங்கள் டைப் செய்யுங்கள். நீங்கள் எந்த மொழியில் டைப் செய்தாலும் முடிந்த வரை அது தானியங்கியாக கண்டுபிடித்து விடும். பிறகு மேலே TO என்ற இடத்தில் எந்த மொழிக்கு மாற்றம் செய்ய வேண்டுமோ அதனை தேர்வு செய்யவும். பிறகு Translate என்பதை க்ளிக் செய்யவும்.
தமிழுடன் சேர்த்து வங்காளம், குஜராத்தி, தெலுங்கு, கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகள் தற்போது சோதனை முறையில் இருக்கின்றன. Google Translate Gadget-ல் இன்னும் இந்த வசதி வரவில்லை.


http://translate.google.com

விண்ணில் இருந்து பொழியும் சுவையான மழை



பல ஆறுகள், விண்ணில் இருந்து பொழியும் சுவையான மழை என்று எது சேர்ந்தாலும் கடலின் சுவை மாறுவதில்லை. அதுபோல தைரியமுள்ளவனின் மனதை சோதனையின் களம் தாக்குவதில்லை.
நீயும் கடவுளாக மாற வேண்டுமா ? பெரும் துன்பங்களுக்கு எதிராகப் போராடு, சித்திரவதை, எதிர்ப்பு, சிறை, சாவு, தூக்குமரம் எது வந்தாலும் கலங்காது நிதானமாக முன்னேறு.

நம்பிக்கை



உன் தலையெழுத்தைத் தீர்மானிப்பவன் நீதான் உன் ஆன்மாவின் எஜமானனும் நீதான்.
ஒரு மனிதனின் நம்பிக்கை அவனுடைய பலவீனத்தை வெற்றி கொள்ளும்.

jeudi 23 juin 2011

வெறுப்பு இருக்கும் இடத்தில் அன்பு செலுத்துங்கள் :


வெறுப்பு இருக்கும் இடத்தில் அன்பு செலுத்துங்கள் : சந்தேகம் உள்ள இடத்தில் நம்பிக்கை கொடுங்கள் : மனச்சோர்வு உள்ள இடத்தில் விசுவாசம் கொடுங்கள் : இருள் உள்ள இடத்தில் வெளிச்சம் கொடுங்கள் : துக்கம் உள்ள இடத்தில் சந்தோசம் கொடுங்கள்.

உன்னிடம் அன்பு இருக்கிறதா என்று உன்னை நீயே கேட்டுப்பார்.


உன் உடலைத் தானம் செய்ய விரும்புகிறாயா.. அப்படியானால் உன்னிடம் அன்பு இருக்கிறதா என்று உன்னை நீயே கேட்டுப்பார். அன்பில்லாத உன் உடல் உறுப்புகள் இன்னொரு மனிதனில் பொருத்தப்பட்டால் அவனும் அன்பற்ற இயந்திரமாகிவிடுவான்.

அன்பு மேன்மையானது.


அன்பு தகாதசெயலில் ஈடுபடாது, தனக்காக எதையும் செய்யாது, எளிதில் உணர்ச்சிவசப்படாது, தீயதை எண்ணாது. அநீதி செய்துவிட்டு சந்தோஷப்படுவது குற்றம், உண்மையைப் பார்த்து, சந்தோஷப்படுவதே மேன்மையானது.

அன்பு


நாம் எவ்வளவு பணக்காரராக இருந்தாலும், வல்லமை உள்ளவராக இருந்தாலும் அன்பு இல்லை என்றால் ஒன்றுமே இல்லை.

lundi 13 juin 2011

உதிரம்


உதிரம் மட்டும் சிகப்பாக்கி

உறவை அதிலே பலமாக்கி
ஆணும் பெண்ணும் இரண்டாக்கி
ஆண்டவர் இணைத்தார் துணையாக்கி.


நேசி


அழகை நேசிக்காதே

அறிவை நேசி
பணத்தை நேசிக்காதே
பாசத்தை நேசி
ஆடம்பரத்தை நேசிக்காதே
அடக்கத்தை நேசி
ஆணவத்தை நேசிக்காதே
அன்பை நேசி
ஏனெனில் 
ஆணவம் அழிவுப்பாதையை
விரைவில் நோக்கி செல்லும்


எந்த வயதினிலும்,

பாசத்தோடு சோறூட்டி விட,
எப்போதும் என்னருகில் வேண்டும்...,
என் அருமை தாய்.......!

விழிகள்



என் விழிகள் துடிப்பது

உன்னை காண
உதடுகள் துடிப்பது
உன்னோடு பேச
இதயம் துடிப்பது
உன்னை தாங்க
இளமை துடிப்பது
உன்னோடு வாழ
ஆனால் இன்று 
என்னால் எதுவும்
முடியவில்லை
உன்னை பிரிந்ததால்..

பழச்சாறுகள் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்


பழச்சாறுகள் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்







பழச்சாறுகளை அடிக்கடி குடிப்பதால் உடல் பருமன், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தல் உள்ளிட்ட உடல் நலக்கேடுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பழச்சாறு அருந்துவது மற்றும் உலர் பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு உண்டாகும் நன்மை, தீமைகள் குறித்து இங்கிலாந்தின் வடக்கு வேல்ஸ் பகுதியிலுள்ள பாங்கர் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. இதன் முடிவுகள் பழச்சாறு பிரியர்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது.
பழச்சாறை தொடர்ந்து சாப்பிடுவதால் பற்களுக்கும் கேடு ஏற்படுவதுடன் கலோரி நிறைந்த உணவுகளை உண்ணத் தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. உடல் பருமன் உண்டாகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. புதிய பழங்களைக் கொண்டு சாறு பிழிந்தாலும் சாறில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.
அதாவது 1 டம்ளர் பழச்சாறில் 5 ஸ்பூண் அளவு சர்க்கரை உள்ளது. எனவே பழச்சாறு பருகுவது உடல் நலத்துக்கு நல்லதல்ல என ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. ஒரு டம்ளர் பழச்சாறில் 4 மடங்கு தண்ணீர் கலந்து பருகினால் பாதிப்புகள் குறையும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே நேரம் பழங்களைவிட உலர் பழங்களை திண்பதால் அதிக நன்மைகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஈக்வானிமிடஸ்



அன்டோனியஸ் பயஸ் என்னும் ரோமானிய மன்னன் மரணப்படுக்கையில் இருக்கும்போது வாழ்வின் தத்துவத்தை ஒரேயொரு வார்த்தையில் சொல்லும்படி கேட்டான். அவனுக்கு வாழ்க்கைத் தத்துவம் பற்றிக் கூறப்பட்ட வார்த்தை ஈக்வானிமிடஸ் என்ற ரோமானிய சொல்லாகும்.
ஈக்வானிமிடஸ் என்றால் : சமத்துவம் ஓர் அமைதியான பொறுமை, வாழ்வின் சோதனைகளை ஏற்றுக் கொண்டு அவற்றுக்கும் மேலாகச் செல்லது என்ற பொருள்தரும். ஆம் வாழ்க்கை என்றால் என்னெவென்று தேடுவோர்க்கு மிக எளிமையான விளக்கமே இதுவாகும்.

வாழ்க்கை பசுமையானது,



கோழைகள் இறப்பதற்கு முன்னரே பலமுறை இறந்துவிடுகிறார்கள். வீரனோ மரணத்தை ஒரு முறைதான் சந்திக்கிறான். மரணம் ஒரு தேவையான முடிவுதான் எப்போது வரவேண்டுமோ அப்போது வந்துவிடும் – வில்லியம் ஷேக்ஸ்பியர்
அவன் ஒரு கல்லை எட்டி உதைத்தான் அதன் அடியில் பாதுகாப்பாக இருந்த பூச்சி பறந்து போனது – இது போன்ற பறப்புத்தான் மரணம், அதற்கு பயப்பிடாதே.
வாழ்க்கை பசுமையானது, வசந்தமானது, மிகவும் சுருக்கமானது, பறந்து போவது. காலப் பெரு வெளியில் நமது வாழ்வு ஒரு கணத்திற்கும் குறைவானது.

மரணம்



நீங்கள் பிறப்பதற்கு முன்பிருந்த காலம் எப்படி உங்களுக்கு சொந்தமில்லையோ, அதுபோலத்தான் இறப்பதற்கு பின்னுள்ள காலமும் உங்களுக்கு சொந்தமில்லை. உங்களுக்கு அடுத்தவர் இடத்தை விட்டுக் கொடுத்ததைப் போல நீங்களும் விட்டுக் கொடுங்கள்.
இந்த உலகில் எப்படி பயமின்றி வந்தீர்களோ அப்படியே இதை விட்டுப் போகும்போதும் பயமின்றிப் போங்கள். மரணத்தில் இருந்து எப்படி வாழ்விற்கு வந்தீர்களோ அப்படியே வாழ்விலிருந்து மரணத்திற்கு போகிறீர்கள் என்று எளிமையாகக் கருதுங்கள். உலக ஒழுங்கில் உங்கள் மரணம் ஒரு பகுதி, ஆனால் உலக வாழ்வில் அது ஓர் அங்கம்.

samedi 11 juin 2011

ஆரோக்கியமான மேனியைப் பெற உதவும் சைவ உணவுகள்


ஆரோக்கியமான மேனியைப் பெற உதவும் சைவ உணவுகள்

சைவ உணவுகளை எடுத்துக் கொள்வது நமது உடல் நலனுக்கு மிகுந்த பலனை அளிக்கும் என்கின்றனர் மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
அதன் பலன்கள் பின்வருமாறு:
நச்சுக்களை அகற்றுபவை: நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை. உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு. அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை.
எலும்புகளை வலுவாக்குபவை: இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது. மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சினை இல்லை.
கார்போஹைட்ரேட் பற்றாக்குறை: அசைவ உணவு அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு. இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக் கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும்.
எளிதில் ஜீரணம்: சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளுகோஸ் சத்தை சீராக அளிக்கும். அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.
ஆரோக்கியமான மேனி: பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.

தமிழ் மொழியில் அறிமுகமாகும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9


தமிழ் மொழியில் அறிமுகமாகும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ஐ தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இந்தி மொழியில் வெளியிட்டிருந்த நிலையில் அண்மையில் மேலும் 53 மொழிகளில் தன் பிரவுசரை வடிவமைத்துத் தந்துள்ளது.
இவற்றில் தமிழ், அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு ஆகிய இந்திய மொழிகள் அடங்கும்.
பல்வேறான மொழிகளில் தன் பிரவுசரை வெளியிட்டதன் மூலம் அனைத்து தரப்பு மக்களிடம் தன் சாதனங்களை மைக்ரோசாப்ட் கொண்டு செல்லும் முயற்சியில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
பிரவுசர் போட்டியில் மற்ற பிரவுசர்களை முந்திச் செல்ல இது கை கொடுக்கும் என மைக்ரோசாப்ட் எண்ணுகிறது. இந்த பிரவுசர் வெளியான போது மைக்ரோசாப்ட் இந்தியாவில் பிரபலமான 29 இணைய தளங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ஐ பிரபலப்படுத்த இந்த ஒப்பந்தம் வழி வகுக்கிறது. 
தமிழ் மற்றும் பிற மொழிகளில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை உங்கள் கணணியில் இயக்க http://windows.microsoft.com/en-US/internet-explorer/downloads/ie-9/worldwide-languages என்ற முகவரி சென்று அங்கிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உங்கள் கணணியில் இயங்கும் ஓபரேட்டிங் சிஸ்டம்(விஸ்டா/விண்டோஸ் 7 x 32 / 64 பிட்) எது என அறிந்து அதற்கேற்ற பதிப்பினை தரவிறக்கம் செய்திடவும்.
விண்டோஸ் எக்ஸ்பியில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 இயங்காது என்பது உங்களுக்கு ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது.

jeudi 2 juin 2011

கனவு



கலைந்துபோகும் என் 
கனவுகளை 
கலைத்து பிடித்து 
கட்டிவைக்க விழையும் 
வாலிபன் நான் 
வசந்தத்தை அனுபவிக்கும் 
வயதில் 
வறுமையை 

உறக்கம் வேண்டும்



ஒளியிழந்து நிலவு,
மௌனத்தில் ஆகாயம்,
உறக்கத்தின் மடியில்
உறைந்து போன உலகம்

ஏக்கத்தில் விழித்திருக்கும் 
இந்த விழிகளுக்கு
ஓரிரவாவது உறக்கம் வேண்டும்

கைத்தொலைபேசி பயன்பாட்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்


கைத்தொலைபேசி பயன்பாட்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்
 உலக சுகாதார மையம் எச்சரிக்கை   கைத்தொலைபேசி பயன்படுத்தாதவர்கள் யாராவது இருக்கிறார்‌களா என்றால் கிட்டதட்ட இல்லை என்று சொல்லும் அளவிற்கு இன்று சர்வதேச சமுதாயத்தில் கைத்தொலைபேசியின் பயன்பாடு ஊடுருவி இருக்கிறது.
இன்றி‌யமையாத அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் கைத்தொலைபேசிகளை காலம், நேரம் பார்க்காமல் உபயோகப்படுத்துவதால் உடலில் புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தும் என அவ்வப்போது எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
இருப்பினும் கைத்தொலைபேசிகள் பயன்பாட்டால் புற்றுநோய் ஏற்படும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்ற வாதமும் நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தான் கைத்தொலைபேசிகள் பயன்பாட்டால் புற்றுநோய் நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக உலக சுகாதார மையம் அண்மையில் விடுத்துள்ள எச்சரிக்கை குறிப்பில் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார மையத்தின் ஒரு அங்கமான சர்வதேச புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. கைத்தொலைபேசிகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அந்தக் குழுவில் 14 நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகள் இடம் பெற்றிருந்தனர்.
குழுவுக்கு தலைவராக அமெரிக்க அ‌திபர் ஒபாமாவின் தேசிய புற்றுநோய் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான டாக்டர் ஜொனாதான் சாமெட் இருந்தார்.
கைத்தொலைபேசிகள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்றும் எனவே அதனை அபாயகரமான பூச்சிக்கொல்லி, சலவை காரங்கள் ஆகிய ரசாயனப் பொருட்களுக்கு நிகராக பட்டியலிட வேண்டும் என்றும் அந்த ஆராய்ச்சிக் குழு பரிந்துரைத்துள்ளது.
கைத்தொலைபேசிகளில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு தான் புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. வெளிநாட்டில் கைத்தொலைபேசிகள் வாங்குபவர்கள், அந்த போனில் இருந்து வெளியேறக்கூடிய கதிர்வீச்சு அளவு ஆகியனவற்ற‌ை அறிந்து கொண்டு பின்னர் தான் கைத்தொலைபேசியை வாங்குகின்றனர்.
ஆனால் இந்தியா போன்ற மற்ற ஆசிய நாடுகளில் நுகர்வோர் மத்தியில் இந்த விழிப்புணர்வு இல்லை என்று பரவலாக கூறப்படுகிறது. இத்தகைய விழிப்புணர்வோடு கைத்தொலைபேசிகளை வாங்கினால் புற்றுநோய் அபாயத்தில் இருந்து ஓரளவுக்கு நாம் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்