முகப்பு

lundi 18 janvier 2016

ஆண்டொன்று போனால்.......



    “ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் அதற்கு முன்னாலே வா வா” என்று காதலில் விழுந்தவர்கள் வேண்டுமானால் பாடி அவசரப்பட்டுக் கொள்ளலாம். வருடா வருடம் புத்தாண்டுச் சபதமெடுக்கிறவர்களும், அத்தனை தீர்மானங்களையும் வரிசை குலையாமல் அதே தீவிரம் குறையாமல் இந்த வருசத்துக்கும் ஒருமுறை சங்கல்பம் செய்துகொள்ளலாம். சங்கல்பம் எல்லாம் செய்துகொள்ளத் திராணியற்றவர்களும், வருசம் பிறந்தாலாவது புதுசாய் நல்லதொரு வழி பிறக்காதா என்று நம்பப் பழகிக்கொண்டுவிட்ட அந்த வழக்கத்தினடிப்படையில் ஒரு புது எதிர்பார்ப்பின் ...பூரிப்பை வெளியிட்டுக் கொள்ளலாம்.
    ஆனால், அதே மனங்களும், அதே வீம்புகளும், அதே வெறுப்புகளும், பிறரைத் தம் மனதுக்குள் அண்டவிடாத அகந்தையும், பன்மைத்துவ வாழ்வு குறித்து எந்தப் பான்மையற்றவராயும் மனிதர்கள் இருக்கையில் எல்லா ஆண்டும் மற்றொரு ஆண்டே!
    மனித குலத்தின் நீண்ட நெடும் பயணத்தில் மேலும் ஒரு ஆண்டு. எத்தனையோ நூற்றாண்டுகளைக் கடந்து, எவ்வளவோ அறிவு வளர்ச்சிகளை அடைந்து, எத்தனையெத்தனையோ மாற்றங்களில் வியப்புகளில் பயணித்து மேலே மேலே ஏறி வந்துவிட்டோம். உயர உயரப் பறந்தது எல்லாம் ஒரு பள்ளத்தாக்கின் உள்ளேதானா?
    இன்னும் வாழும் வழி தெரியவில்லை. மனிதரை மனிதர் நோகச் செய்யும் வழக்கம் ஒழியவில்லை. எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிறை, எல்லோர்க்கும் ஒரே நீதி, எல்லோர்க்கும் இந்த பூமி என்கிற மனிதகுல லட்சியத்தை எட்ட முடியவில்லை. மனிதப் பொது விருப்பமெல்லாம் இன்னும் கனவாகவே தொடர்கிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire