முகப்பு

samedi 26 décembre 2015

அழியா நினைவுகளின் அகவைகள் பதிணொன்று



அழியா நினைவுகளின் அகவைகள் பதிணொன்று
ஆழிப் பேரலை 26-12-2014

பூமிப்பந்தின் வரலாற்றில் கடந்த 2004 டிசம்பர் 26ல் தென்னாசியக் (இந்தோனேசியா, இந்தியா உட்பட இலங்கை வரை), கரையோரங்களைத் தனது கொடூர அரக்கத்தனத்தால், கண் இமைக்கும் நேரத்தில் அழித்து, மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மனித உயிர்களைப் பலியெடுத்து சின்னா பின்னமாக்கிய “சுனாமி” எனப்படும் ஆழிப்பேரலையை எம்மிலே யார்தான் மறக்க முடியும்?
...
உலக மகா யுத்தங்கள் இருதடவைகள் வந்து போயின, பல்வேறு நாடுகளுக்கிடையில் யுத்தங்கள் தொடர்கின்றன. காலத்திற்குக் காலம் இயற்கை அழிவுகள் எற்படுவதை வரலாறு தெரிவித்தாலும், ஆழிப்பேரலையின் சாவின் பிடியில் சிக்கி உயிர் தப்பியவர்கள் வாழ்வைப் பற்றிய உண்மையை உணர்த்தியதை வரலாற்றில் என்றுமே, எவருமே மறுக்கவோ, அல்லது மறைக்கவோ முடியாது.

இக்கொடூரம், எமது தாயகத்தின் வடமாநில வன்னி பெருநிலப்பரப்பில், எனது பிறப்பிடமான முல்லைத்தீவில், எமது உறவுகள் 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி காலை புனித சூசையப்பர் ஆலயத்தில் திருக்குடும்பத் திருவிழாத் திருப்பலியில் கலந்து கொள்ளும்போது இடம்பெற்றது.

முல்லைத்தீவில் புனித சூசையப்பர் ஆலயம் கடலிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவிற்கப்பால் அமைந்துள்ளதால், திருப்பலியில் கலந்து கொண்டோர் உயிர்தப்ப, பல்வேறு காரணங்களால் வீடுகளில் தங்கிய ஆயிரக்கணக்கானோர் அநியாயமாகக் கொல்லப்பட்டனர்.

முல்லைத்தீவில் குழந்தைப் பருவத்தில் திருமுழுக்குப் பெற்றதிலிருந்து வாலிப வயது வரை எனது உணர்வுகளோடு இரண்டறக் கலந்த புனித பேதுரு ஆலயம், தூய மரியன்னை ஆலயம், திருக்குடும்பக் கன்னியர் மடம் மற்றும் முல்லைத்தீவு மகாவித்தியாலயம் என்பன முற்றாக அழிக்கப்பட, புனித பேதுரு ஆலயம் சுனாமி நினைவாலயமாக மறுவுரு எடுத்துள்ளது.

பயங்கரக் கொடூரம் நிறைந்த இந்நிகழ்வால், கணவனை இழந்தோர், மணைவியை இழந்தோர், பெற்றோரை இழந்தோர். பிள்ளைகளைப் பறிகொடுத்தோரென ஆயிரத்திற்கு மேற்பட்டோரின் பதறியழும் சோகக்கதைள் சொல்லிலோ எழுத்திலோ விபரிக்க முடியாதது. மக்களது உயிரிழப் புக்களோடு மிகப்பெரிய பொருட்சேதமும் ஏற்பட்டது.

கடல் நீர் கழுத்தளவு வருவதனை நாம் கண்டுள்ளோம். ஆயினும் கரும்பைனையளவு உயரத்திற்கு மேலாக வந்ததனை கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம்திகதி காலையில் தெற்காசிய நாடுகளின் பல இலட்சக்கணக்கான மக்கள் கண்டு பயப்பீதி அடைந்தது வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட அழியாத உண்மையாகிவிட்டது.

இப்பேரலையால், ஒருசில மணி நேரங்களுக்குள் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களது உயிர்களைக் கொண்று குவிக்கப்பட்டு. ஒருசில ஊர்கள் இருந்ததற்கான அடையாளமே இல்லாத அளவிற்கு மாறியுள்ளதாகப் பல ஊடகங்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றன.

ஊரோடு சேர்ந்து, குடியிருந்த வீட்டோடு கூண்டோடு கூண்டாய்ப் பலர் அநியாயமாகக் கொல்லப்பட்ட கதை அறியாதார் யாருண்டு? ஊரும் போய், பழகிய முகங்களெல்லாம் பல திசையில் சடலமாகி, இதையெல்லாம் பார்க்கத்தானா என்னையும் விட்டுவைத்தாயென? நேரில் சந்தித்தவர்கள் இன்னமும் கதறியழுவதனை நாம் கண்டுணராது வாழமுடியுமா?

கண்ணைத் திறந்தால் வாழ்வு கண்ணை ழூடினால் சாவு, என்று கண்ணிமைப் பொழுதில் அகில உலகத்தையும் அடித்துப்புரட்டி, அதிர்ச்சிக்குள்ளாக்கிய பயங்கரக் கொடூரம் நிறைந்த இச் சம்பவத்தை சிலர் மறந்து வாழ்ந்தாலும், இன்றும் எம்மில் பலரது உணர்வுகளை விட்டகலாதுள்ளது.

தாயகத்தில் இடம்பெற்ற சோகம் நிறைந்த இப்பயங்கர அனுபவங்களைக் கேள்விப்பட்டு, புலம்பெயர் நாடுகளில் வாழும் என்போன்ற பலர் மிகுந்த வேதனைப்பட்டதுண்டு. எனினும் சிலர் அவ்வாறான ஒரு நிகழ்வுகளே எம்மிடையே நடக்கவில்லை என்பது போன்று தம்மை மறந்து, தான்தோன்றித் தனமாக வாழும் நிலையை என்னிக் கவலைப்படுவதனைத் தவிர எம்மால் வேறென்ன செய்ய முடியும்?

எமது உணர்வுகளில் ஒன்றாகி மனதை விட்டகலா நினைவுச் சின்னங்களாக அவை நிறைந் திருப்பதனை எல்லாம் வல்ல இறைவன் நன்கறிவார் என்பது மட்டும் உண்மை. அழிக்க முடியாத நினைவுகளாக, மனதை விட்டகலாத ஆழிப்பேரழிவின் நினைவுச் சின்னங்கள் சிலவற்றை இந்தப் புகைப்படத் தொகுப்பின் வழியாக உங்கள் முன் சமர்ப்பிக்க விரும்புகின்றேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire