முகப்பு

jeudi 9 mai 2013

முயற்சியில்லாத மனிதன்.

 
 
ஒருவர் செய்த தியாகம், தளராத முயற்சிகள், விடாது பற்றிக் கொண்ட நம்பிக்கைகள், தங்கள் இதயக்கனவை நிறைவேற்ற கடந்த இருளான வழிகள், வலிகள் போன்றவற்றை பார்க்காது அவருடைய வெற்றியை மட்டுமே பார்க்கிறது உலகம். அதுபோல தனக்கும் அதிர்ஷ்டம் வராதா என்று கிரகத்தை பார்க்கிறான் முயற்சியில்லாத மனிதன்.

தாமதமாகிவிடலாம்.

 
 
மன்னியுங்கள், மறந்துவிடுங்கள், உங்கள் தவறுகளை மற்றவர்கள் எப்படி மன்னிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படியே மற்றவர்களை மன்னியுங்கள். பொறுமையோடும் புரிதலோடும் இருங்கள் விரோதம் பாராட்டவோ பழிவாங்கவோ நேரமில்லை வாழ்க்கை குறுகியது.
வாழ்க்கை குறுகியது, நம் பகைமையை தொந்தரவுகளை மறக்க வேண்டும். இன்னும் காலம் இருக்கும்போதே மறக்க, மன்னிக்க வேண்டும். சண்டையை நிறுத்த காத்திருக்காதீர்கள். அன்பான வார்த்தையை சொல்ல அன்பான செயலை செய்ய காத்திருக்காதீர்கள். காலம் குறுகியது நாளை மிகவும் தாமதமாகிவிடலாம்.

சந்தோஷத்தை இழந்துவிடாதே.

 
 
உனக்கு வயதாகும் ஆனால் வாழ்வின் துடிப்பை இழந்துவிடாதே.. ஏனெனில் தெருவின் இறுதி வளைவுதான் சிறந்த வளைவு.
 ஒவ்வொரு வருடமாக வாழ்வை வாழ்..
எதிர் காலத்தை நோக்கி தளராத இதயத்துடன் இரு
இலட்சியத்தை விட்டு விலகாதே
பயணம் கரடு முரடாக அல்லது வழுவழுப்பாக இருக்கட்டும்
நீ மட்டும் சந்தோஷத்தை இழந்துவிடாதே.

அளக்கப்படுகிறது.

 
 
ஒரு மனிதனின் மதிப்பு அவன் வாழ்ந்த வருடங்களின் எண்ணிக்கையாலோ அல்லது செய்த வேலையாலோ அளக்கப்படுவதில்லை. ஒரு மனிதனின் மதிப்பு அவன் உருவாக்கிய நடத்தையால்தான் அளக்கப்படுகிறது.

இன்னொரு பிறவி

 
 
இந்தப்பிறவியில் நம்மை நேசிப்பவரை அறிந்து அன்பு செய்யாவிட்டால் நமக்கு இன்னொரு பிறவி இருந்து என்ன பயன் ? 

இதயத்தில்

 
 
இலையுதிர் காலம் என் தலையில் இருக்கிறது ஆனால் வசந்த காலம் என் இதயத்தில் இருக்கிறது. 

சந்தோஷங்கள் மாறுவதில்லை.

 
கவலையோ குழப்பமோ இன்றி ஒவ்வொரு நாளையும் வரவேற்று, தனக்கு விதிக்கப்பட்ட செயல்களை செய்து, சந்தோஷமாக, பயமற்று வாழுங்கள். நல்ல நண்பர்களை உருவாக்குங்கள், நல்ல நினைவுகளை எண்ணி மகிழுங்கள், காலம் மறைவதை புறக்கணியுங்கள், எதிர் காலத்தை மட்டும் பாருங்க...ள் வாழ்வில் சிறந்தது இனிமேல்தான் வரப்போகிறது.
வயதான காலத்தை அரவணைத்து நேசியுங்கள். அதை எப்படி நேசிப்பது என்று உங்களுக்கு தெரிந்தால் அதில் சந்தோஷம் மிதமிஞ்சி இருக்கிறது. மெதுவாக கடந்து செல்லும் வருடங்கள்தான் ஒரு மனித வாழ்வில் மிக இனிமையானவை. அவை இறுதியை அடைந்துவிட்டாலும் அதன் சந்தோஷங்கள் மாறுவதில்லை.
 

உண்மை உங்களுக்கு

 
 
கோழைகள் இறப்பதற்கு முன்பே பல தடவைகள் இறந்துவிடுகிறார்கள் ஆனால் வீரன் ஒருதடவைதான் இறக்கிறான். மரணம் ஒரு தேவையான முடிவுதான் எப்போது வரவேண்டுமோ அப்போது வந்துவிடும். அந்த அழைப்பு ஒன்றுமட்டுமே நிராகரிக்க முடியாத அழைப்பாகும்.
கால வெளியில் ஒரு கண...த்திற்கும் குறைவானது நம் வாழ்க்கை. அது பசுமையானது, வசந்தமானது, மிக சுருக்கமானது, ஒரு நாள் கல்லை உதைத்தவுடன் அதன் அடியில் இருந்து பறக்கும் பூச்சி போல பறந்துவிடும்.
உலகில் உயிருடன் வலம்வரும் அனைவரும் பூமிக்கு அடியில் உறங்குவோருடன் ஒப்பிட்டால் மிகவும் ஒரு சிலர்தான். இயற்கையின் போதனையை அமைதியாகக் கேட்டால் இந்த உண்மை உங்களுக்கு அழகாக விளங்கும்.
 

mercredi 8 mai 2013

நிச்சயமானது, நம்பகமானது

 
 
வாழ்க்கையைப்பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரிகிறது என்பதைவிட நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். அடுத்தவர் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, தவறு செய்யாமல் இருப்பவர்கள் துன்பங்களில் சிக்குப்படமாட்டார்கள். நிச்சயமற்ற இந்த உலகில் மனித அனுவம் என்ற கடந்த காலச் சரித்திரமே நமக்கு தெரிந்தவற்றிலேயே நிச்சயமானது, நம்பகமானது

திரும்பப் பெற முடியாது.

 
 
எய்த அம்பு.. வீணாகக் கழித்த காலம்.. தப்பான சொற்கள் ஆகிய மூன்றும் திரும்பி வர முடியாதவை. இவை மூன்றும்; அம்பு போன்றவை, எய்துவிட்டால் திரும்பப் பெற முடியாது. 

சரியான பாதையைக் கண்டு பிடிப்பாய்

 
 
வாழ்க்கை என்பது கோடுகளால் கட்டங்கள் போடப்பட்ட மாயப் பெட்டி ஒன்றுக்குள் ஓடுவதைப் போன்றது. நடு வழியில் சரியான பாதை எதுவென்று தெரியாத குழப்பம் ஏற்படும். அதைப்பார்த்து பயணத்தை நிறுத்திவிடாதே.. தொடர்ந்து நட ஒரு கட்டத்தில் சரியான பாதையைக் கண்டு பிடிப்பாய்..

தீமை தரும் வார்த்தை



 
 
உங்களைப் பார்த்தால் முதுமையாக இருக்கிறது.. அடடா நோயாளியாக மாறிவிட்டீர்கள் என்று மோசமான கருத்துக்களை மற்றவர்களை நோக்கி துப்பக்கூடாது. குப்பைத் தொட்டிக்குள் போடும் அருவருப்பான வார்த்தைகளை மற்றவரை நோக்கி உழிழக்கூடாது. அப்படிச் செய்தால் பாதிக்கப்படுபவரை விட உங்கள் மனமே அழுக்குக் கூடையாகும்.
 மற்றவர்களை நோக்கி தகாத தூஷண வார்த்தைகளை சொல்லித் திட்டிய எவரும் தன்னளவில் நலமாக இருந்தாக சரித்திரம் கிடையாது. ஆகவே நல்ல வார்த்தைகளை பேசுங்கள் நீங்கள் நல்லவர்களாக மாறுவீர்கள். நாகாஸ்திரம் என்பது நாக்கில் இருந்து வரும் நஞ்சு தடவிய வார்த்தைகளே என்பதை உணர வேண்டும்.
 தீமை தரும் வார்த்தைகளை ஒரு காலமும் உணர்ச்சி வசப்பட்டு சொல்லக்கூடாது, சொன்னால் இதயத்தின் ஆழத்தில் விழுந்து அது தீமைகளை விளைவிக்கும்.

வெற்றிகரமான வாழ்க்கை

 
 
நல்ல பெயர்கள் நம்முடைய வாழ்க்கையை வழி நடாத்துகின்றன.. மக்கள் திலகம் என்ற பெயர் எம்.ஜி.ஆரை தமிழக முதல்வராக்கியது, நடிகர் திலகம் என்ற பெயர் சிவாஜியை ஆசிய – ஆபிரிக்க சிறந்த நடிகராக்கியது. காந்தி என்ற பெயர் காந்தம் போல மக்களை கவர்ந்து இந்திய சு...தந்திரத்தையே பெற்றுக் கொடுத்தது..

கம்பன் என்ற பெயருக்குள் கம்பராமாயணமே இருக்கிறது..
வள்ளுவன் என்ற பெயருக்குள் திருக்குறளே இருக்கிறது..
இளங்கோவடிகள் என்ற பெயரில் சிலப்பதிகாரம் இருக்கிறது..
ஒளவை என்ற பெயருக்குள் பெண் அறிஞர் இருக்கிறார்..
பிரபாகரன் என்ற பெயருக்குள் உலகப் புகழ்பெற்ற தன்மான வீரன் இருக்கிறான்..
இவைகள் வெறும் பெயர்கள் அல்ல வெற்றிகரமான வாழ்க்கை


மன வளர்ச்சியை பாதிக்கும்.

 
 
குறை கூறுதல், கேலி செய்தல், குழந்தைகளை அதட்டுதல், குட்டுதல், அவர்களுக்கு மதிப்பளிக்காதிருத்தல் போன்ற கொடுஞ் செயல்களை செய்ய வேண்டாம் அது குழந்தைகளின் மன வளர்ச்சியை பாதிக்கும்.

mardi 7 mai 2013

குறை

 
 
ஒருவரிடம் எந்தக் குறையைக் காண்கிறீர்களோ, அந்தக் குறை உங்களிடம் இல்லையா என்று சோதித்துப் பாருங்கள். அப்போது உங்களிடம் உள்ள குறைகள் என்னவென்பது உங்களுக்கு தானாகவே விளங்கிவிடும்.

mercredi 1 mai 2013

அன்பு


 
எல்லோரையும் மனம் கனிந்து வாழ்த்த வேண்டும். மனம் இசைந்து நன்றி சொல்ல வேண்டும். அன்பு இல்லையெனில் வாழ்த்தும் நன்றி உணர்வும் தோன்றமாட்டாது.

உணர்வே

 
 
நம்மில் பலருக்கு மற்றவர்களைப் பற்றி அதிகம் தெரியும், அவர்களுடைய குற்றம் குறைகளை பட்டியல் போடுவோம் ஆனால் நம்மிடம் உள்ள குறைகளைப்பற்றிய உணர்வே நம்மிடம் இருப்பதில்லை.

சிந்திக்கப் பழக வேண்டும்.

 
 
ரயில் தண்டவாளத்தில் சிக்குப்பட்டுவிட்டான் ஒருவன். நள்ளிரவு நேரம்..! காப்பாற்ற எவரும் வரவில்லை. தூரத்தே ரயில் வண்டி வருகிறது. மரணம் ஏறத்தாழ நிச்சயமாகிவிட்டது. என்ன செய்யலாம்.. பாக்கட்டை பார்த்தான் சிகரட் கொழுத்தும் லைட்டர் மட்டும் இருந்தது. ...அதை கொழுத்தி கையில் பிடித்து அங்கும் இங்கும் ஆட்டினான்… யாரோ நிற்பது தெரிந்து ரயில் நின்றது. சிகரட் பற்ற மட்டும் பயன்படும் என்ற லைட்டரின் பாவனையை மாற்றி சிந்தித்த காரணத்தால் அவன் உயிர் தப்பியது. ஆகவே எப்போதும் மாற்றி சிந்திக்கப் பழக வேண்டும்.

மலர்த்தோட்டமாக மாறும்

 
 
அன்பைக் கொடுத்தவர்கள் தோற்றதில்லை,
ஆறுதலைக் கொடுத்தவர்கள் இழந்ததில்லை,
மன்னிப்பைக் கொடுத்தவர்கள் துன்புற்றதில்லை,
புரிந்து கொண்டவர்கள் சண்டையிட்டதில்லை,
நேசித்தவர்கள் நஷ்டப்பட்டதில்லை.
இதைத் தொடர்ந்து சொன்னால் ஆறுதல், நேசம், புரிதல், மன்னிப்பு, அமைதி, அன்பு, மனத்தெளிவு, நம்பிக்கை ஆகிய வளமைகள் நம்மிடம் சேரும்.
நல்ல மன உணர்வுகள் என்ற வளமைகள் மலர்ந்தால் நாம் வாழும் இடம் மலர்த்தோட்டமாக மாறும்.

அவர்களின் ஊதியத்தை கொடுத்திடுங்கள்…

 
 
ஏழை உழைப்பாளர்கள் உழைத்துகொண்டே தான்
இருக்கிறார்கள்…
ஆனால்
ஊதியம் மட்டும் மிஞ்சுவதேயில்ல…!
உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்தது உடல்
அதில் மிஞ்சும் காசுக்கு
...தேய்ந்த உடலை தேத்தக் கூட முடிவதில்லை..!
உழைப்பாளர்களை காணும்போது உற்று கவனியுங்கள்…
அவர்கள் உடலின் ஒவ்வொரு
எலும்பிலும் ஏக்கம் தெரியும்…
எத்தனை உழைத்தபோதும் இந்த
எலும்பு மட்டுமே மிஞ்சுகிறது; என,
உழைப்பவர்களுக்கு அவர்கள்
வியர்வை உலர்ந்து விடுவதற்குள்
அவர்களின் ஊதியத்தை கொடுத்திடுங்கள்…